திருவான்மியூர் பறக்கு ரயில் நிலையத்தில் நடைபெற்ற கொள்ளையில் மனைவியுடன் சேர்ந்து கொள்ளையடித்து நாடகமாடிய வடமாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பயணிகள் சிலர் டிக்கெட் எடுப்பதற்காக தரை தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருந்தனர். தினசரி அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படும் டிக்கெட் கவுண்ட்டர் நேற்று திறக்கப்படாமல் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் இதுபற்றி கேட்டனர்.
உடனே அங்கு வந்த ரயில்வே போலீசார், வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே ஊழியர் ஒருவர், அங்கிருந்த ஜன்னலில் கை, கால்களை பின்னால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டு கை, கால் கட்டுகளை அவிழ்த்த ரயில்வே போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் தன்னை முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். ரெயல்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி, சென்னை மண்டல எஸ்.பி. அதிவீரபாண்டியன், சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில்குமரேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சம்பவம் நடந்த இடம், ரயில் நிலைய நடைமேடைகளை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே ஊழியரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘தனது பெயர் டீக்காராம் மீனா ( 28) என்றும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தெற்கு ரயில்வேயில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து சோதனை மேற்கொண்ட திருவான்மியூர் ரயில்வே போலீசார், இதுபற்றி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமே தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது தற்போது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்திக்கொண்ட டீக்காராம் தனது மனைவியுடன் இணைந்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நேற்று அதிகாலை டீக்காராம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் சென்ற சில நிமிடங்களில் அவரது மனைவி சரஸ்வதி பின் தொடர்ந்து ரயில் நிலையத்திற்குள் சென்றுள்ளார். அங்கு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1.32 லட்சம் பணத்தை டீக்காராம் தனது மனைவியிடம் எடுத்துக்கொடுத்துள்ளார். மேலும், கொள்ளைப்போனது போல பிம்பத்தை உருவாக்க மனைவியை தனது கை, கால்காளை கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதனையடுத்து, டீக்காராமின் மனைவி பணம் ரூ.1.32 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது கணவன் கூறியபடி அவரது கை,கால்களையும், வாயையும் கட்டிவிட்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதபோது அதற்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் டீக்காராமும், அவரது மனைவியும் ரயில் நிலையத்திற்குள் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரயில்வே பணம் ரூ. 1.32 லட்சத்தை தாங்களே கொள்ளையடித்துவிட்டு கொள்ளைப்போனதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ரயில்வே ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரயில்வே பணம் ரூ.1.32 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.