Today is Saturday 2023 Apr 01

உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.


சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி-2021 இம்மாதம் உகாண்டா நாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில் தமிழக வீரர்கள் 9 பேர் இடம் பெற்றனர். இந்தப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 45 பதக்கங்களை வென்றனர். இதில் தமிழக வீரர், வீராங்கனைகள் மட்டும் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகள் ருத்திக், தினகரன், சிவராஜன், கரண், அமுதா, சந்தியா, பிரேம் குமார், சீனிவாசன் நீரஜ், போட்டிகளில் பங்கேற்ற வீரர் தினேஷ், பயிற்சியாளர்கள் பத்ரிநாராயணன், இர்பான் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

இந்த நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி்வ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை உறுப்பினர் செயலர் டாக்டர் ஆனந்தகுமார், பாரா பாட்மிண்டன் சங்கத் தலைவர் அசோக், துணைத் தலைவர் சத்யநாராயணன், துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

சையது முஸ்தாக் அலி டி20 கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சையது முஸ்தாக் அலி என்னும் மாநில அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் விஜய் சங்கர் தலைமயிலான தமிழ்நாடு அணியும், மனீஸ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும் நுழைந்தன.

நேற்று (22-ம் தேதி) நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை விட்டுக் கொடுத்து 153 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்று, தொடரை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது. இறுதிப் பந்தில் வெற்றி பெறத் தேவையான ரன்களைச் சேர்த்த தமிழக வீரர் ஷாருக்கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "SyedMushtaqAliTrophy-இல் தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்! ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!" என தெரிவித்துள்ளார்.

திருவான்மியூர் பறக்கு ரயில் நிலையத்தில் நடைபெற்ற கொள்ளையில் மனைவியுடன் சேர்ந்து கொள்ளையடித்து நாடகமாடிய வடமாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பயணிகள் சிலர் டிக்கெட் எடுப்பதற்காக தரை தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருந்தனர். தினசரி அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படும் டிக்கெட் கவுண்ட்டர் நேற்று திறக்கப்படாமல் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் இதுபற்றி கேட்டனர்.

உடனே அங்கு வந்த ரயில்வே போலீசார், வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே ஊழியர் ஒருவர், அங்கிருந்த ஜன்னலில் கை, கால்களை பின்னால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டு கை, கால் கட்டுகளை அவிழ்த்த ரயில்வே போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் தன்னை முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். ரெயல்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி, சென்னை மண்டல எஸ்.பி. அதிவீரபாண்டியன், சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில்குமரேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சம்பவம் நடந்த இடம், ரயில் நிலைய நடைமேடைகளை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே ஊழியரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘தனது பெயர் டீக்காராம் மீனா ( 28) என்றும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தெற்கு ரயில்வேயில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து சோதனை மேற்கொண்ட திருவான்மியூர் ரயில்வே போலீசார், இதுபற்றி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமே தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது தற்போது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்திக்கொண்ட டீக்காராம் தனது மனைவியுடன் இணைந்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நேற்று அதிகாலை டீக்காராம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் சென்ற சில நிமிடங்களில் அவரது மனைவி சரஸ்வதி பின் தொடர்ந்து ரயில் நிலையத்திற்குள் சென்றுள்ளார். அங்கு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1.32 லட்சம் பணத்தை டீக்காராம் தனது மனைவியிடம் எடுத்துக்கொடுத்துள்ளார். மேலும், கொள்ளைப்போனது போல பிம்பத்தை உருவாக்க மனைவியை தனது கை, கால்காளை கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதனையடுத்து, டீக்காராமின் மனைவி பணம் ரூ.1.32 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது கணவன் கூறியபடி அவரது கை,கால்களையும், வாயையும் கட்டிவிட்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதபோது அதற்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் டீக்காராமும், அவரது மனைவியும் ரயில் நிலையத்திற்குள் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரயில்வே பணம் ரூ. 1.32 லட்சத்தை தாங்களே கொள்ளையடித்துவிட்டு கொள்ளைப்போனதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ரயில்வே ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரயில்வே பணம் ரூ.1.32 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

post-slider

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16, 19 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து, வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இதையடுத்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பிற கட்சிகளுடன் இறங்கி தங்கள் கட்சிகளுக்கான இடங்களை கைப்பற்றிவந்தன.

இந்நிலையில், பாஜக – அதிமுக கட்சிகளுக்கிடையிலான இடஒதுக்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை, கடந்த சனிக்கிழமை தொடங்கி முடிவு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் சுமுக நிலை எட்டப்படாததையடுத்து, பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உந்து சக்தியாக இருக்கின்றனர். காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டத் திருத்தம், வேளாண் சட்டம் வரை பாஜகவிற்கு துணையாக இருந்தனர்.

தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்த்து, அகில இந்திய தலைவர்களும் ஏற்ற பிறகே அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்.

மேலும் இது கடினமான முடிவு அல்ல. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற தொண்டர்கள் குரலுக்கு செவி சாய்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான தருணத்திலும் திறமையாக கட்சி நடத்துகின்றனர் ஓபிஎஸ், ஈபிஎஸ்” இவ்வாறு அவர் கூறினார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதற்காக சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள வனங்களில் வாழும் புலிகளைக்காப்பதற்காகவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டபுள்யு டபுள்யு எப் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான அமைப்புகள்,பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த அமைப்பினர் நடத்திய ஆய்வில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், கடந்த 2010-ம் ஆண்டு இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சத்தி புலிகள் காப்பகத்திற்கு டிஎக்ஸ் 2(TX2) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டபுள்யு டபுள்யு எப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீலகிரி உயிர்க்கோள நிலப்பரப்பைச் சேர்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் புலிகள் வாழ்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட சத்யமங்கலத்தில் தற்போது 80 புலிகள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் மற்றும் பி.ஆர்ஹில்ஸ் புலிகள் காப்பகங்களுடன் இந்த காப்பகம் இணைந்துள்ளது. இதனால் புலிகளால் எளிதாக இரை தேடவும் புதிய எல்லைக்குள் பிரவேசிக்கவும் முடிகிறது.

இதேபோல், புலிகளின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரித்ததற்காக நேபாளத்தில் உள்ள பார்டியா தேசியப் பூங்காவும், இந்த ஆண்டுக்கான டிஎக்ஸ் 2 விருதினைப் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்திற்கும் இடையே புலிகள் தடையின்றி, எல்லைகளைத் தாண்டிச் சென்று வர இந்த பூங்கா வழிவகுக்கிறது.

உலக அளவில் 2010-ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை 3200 ஆக சரிந்திருந்த நிலையில், 2016-ல் நடத்தப்பட்ட ஆய்வில் புலிகள் எண்ணிக்கை 3900-மாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்கோயில் செயல் அலுவலர்களை பாராட்டி, தரச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக, மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு – அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை – அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சென்னை, தங்கசாலை - அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயில் – அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருப்போரூர் – அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், மகாபலிபுரம் – அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சென்னை – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், சென்னை – அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் இணை ஆணையர், செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்கள் வழங்கி, வாழ்த்தினார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பழனி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் - அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.76 கோடி செலவில் 754 திருக்கோயில்களில் நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாட்டு நிறுவனம், நாடு முழுவதும் உணவு தயாரித்து வழங்கிடும் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பரிசோதித்து தரச்சான்றிதழ் வழங்கும் பணியினை செய்து வருகிறது. இந்நிறுவனம் மத வழிபாட்டு தலங்களில் தயாரிக்கப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளை பரிசோதித்து கடவுளுக்கு சுத்தமான சுகாதாரமான பிரசாதம் படைத்தல் (BHOG-Blissful Hygienic Offering to God) சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகள் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் தயாரிக்கப்படுவதை பரிசோதனைக்குட்படுத்தி இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தரச்சான்றிதழ்கள் 6 திருக்கோயில்களுக்கு மட்டுமே பெறப்பட்ட நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசின் சீரிய முயற்சியால் 308 திருக்கோயில்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், 440 திருக்கோயில்களுக்கு சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 394 மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் 314 திருக்கோயில்களுக்கு இச்சான்றிதழ் பெறப்பட்டு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதன் மூலம் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் சுத்தமாகவும், சுகாதார முறையிலும் தயாரித்து வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளையில் அடிபட்டுஉயிர்பிழைத்த சிறுவனிடம் போனில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு, 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' அரசு திட்டம் மூலம் உயிர்பிழைத்த சிறுவனிடம் போன் மூலம் கலந்துரையாடி முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் அடிபட்டு உயிர்பிழைத்த சிறுவனிடம் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். அப்போது, ''தம்பி ஸ்டாலின் பேசுறேன். நல்லாயிருக்கியா, வலி இருக்குதா. தைரியமா இரு, எப்படி விபத்து ஏற்பட்டது'' என்றும், ''மருந்துகள் கொடுத்திருக்கிறாங்களா'' என்றும் கேட்டறிந்தார். ''ஏதேனும் வேண்டுமென்றால் எம்.பி ராஜேஸிடம் தெரிவிக்கவும்'' என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது முதல்வரிடம் பேசிய சிறுவனின் தாயார் தங்களது மகனை காப்பாற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் சிறுவன் சு.வர்ஷாந்த் உடன் இருந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறுவன் வர்ஷாந்துக்கு பழங்கள், சத்துமிகுந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டி, வசந்தபுரம் அருகில் உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வர்ஷாந்த் (வயது 13), 13.1.2022 அன்று பொங்கல் திருநாளுக்கு பயன்படுத்தும் பூலப்பூவை விற்றுவிட்டு, தனது தந்தை, தாய் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மோதி இரவு 7.00 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தாய், தந்தை இருவருக்கும் பாதிப்பு இல்லை. விபத்தில் சிறுவன் வர்ஷாந்த்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இரவு 7.50 மணியளவில் சேர்க்கப்பட்டார்.

நாமக்கல் தனியார் மருத்துவ மனையில் அரசு திட்டத்தின்மூலம் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறுவன் வர்ஷாந்துக்கு பழங்கள், சத்துமிகுந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

இந்த மருத்துவமனையில் முதல்வரின் சிறப்பு திட்டமான 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டார்கள். சிறுவன் வர்ஷாந்த்துக்கு தலையில் அடிபட்டதால், அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

12 மணி நேரம் கழித்து மூளையில் ரத்தக் கசிவு அதே அளவில் உள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதற்காக மீண்டும் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. ரத்தக் கசிவும், மூளை அழுத்தமும் அதிகமானதால் அன்றே நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் (நியூரோ சர்ஜன்) மருத்துவர் பாலசுப்பிரமணியன், மருத்துவர்.ஷியாம்சுந்தர் உள்ளிட்ட குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொணன்டர். இதன்மூலம் ரத்தக் கசிவு அகற்றப்பட்டது.

விபத்தில் சிக்கிய சிறுவன் வர்ஷாந்துக்கு உடனடியாக சிகிச்சை, பரிசோதனை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உயிர் காக்கப்பட்டார். தற்போது செல்வன் வர்ஷாந்த் தெளிவாக நல்ல நிலையில் உள்ளார். இவர் சிகிச்சை முடித்து தற்போது பொட்டிரெட்டிபட்டி மண்கரடு பகுதியில் உறவினர் வீட்டில் உள்ளார். சிகிச்சை குறித்து மருத்துவர் தெரிவிக்கையில், ''சாலை விபத்தில் பாதிக்கப்படக்கூடிய ஏழை நோயாளிகளுக்கு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் - மிகப் பெரிய நன்மை பயக்கும். மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் இத்திட்டத்தில் அனுமதி அளித்து திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி'' என்றார்.

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை மற்றும் ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9316 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 25 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.26 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 26.66 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உரிய நேரத்தில் சினை பிடித்து கன்று பெறவும், தரமான பால் மற்றும் அதிக அளவு பால் பெற்று பால் உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியில் இலாபம் ஈட்டவும், கால்நடைகளுக்கு தரமான கால்நடை தீவனம் வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, ஈரோடு ஒன்றியத்தில் 1982 ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலை நிறுவப்பட்டு தீவன உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர், இத்தொழிற்சாலையில் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் தீவன உற்பத்தி திறன் கொண்டதாக உயர்த்தப்பட்டது.

பால் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இத்தீவன ஆலையின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் இயந்திரங்கள் நிறுவி, உற்பத்தி அளவினை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக உயர்த்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1 கோடியே 70 இலட்சம் ரூபாயும், ஒன்றிய பங்களிப்பாக 1 கோடியே 70 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன்னாக உற்பத்தி திறன் உயர்த்தப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.

இதன்மூலம் 19 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை சார்ந்த 7792 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு கால்நடைத் தீவனம் வழங்க வழிவகை ஏற்படும்.

கறவையினங்களின் பால் உற்பத்தி, இனப்பெருக்க திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவற்றை அதிகரிக்கப்பதில் தாது உப்புக் கலவை பங்கு மிக முக்கியமானதாகும். அவ்வாறு, பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தாது உப்புக் கலவை வழங்கும் பொருட்டு ஈரோடு, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் நாளொன்றுக்கு தலா 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலைகள் மூலம் தாது உப்புக் கலவை தயாரிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமும் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொழிற்சாலையில் உற்பத்திச் செய்யப்படும் தாது உப்புக் கலவையில் கறவையினங்களுக்கு தேவையான அனைத்து விதமான தாது உப்புக்கள் சேர்க்கப்பட்டு, ஒரு கிலோ பைகளாக தயார் செய்யப்பட்டு, கிலோ ஒன்றுக்கு ரூ.50 என்ற விலையில் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாதமொன்றிற்கு சுமார் 2.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தாது உப்புக் கலவையின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ரூ.67.50 லட்சம் மற்றும் ஒன்றிய பங்களிப்பாக ரூ.67.50 லட்சம், என மொத்தம் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மாநில செய்திகள்

தமிழ்நாடு