இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமிக்ரான் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.
இதனிடையே நாடு முழுவதும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒமிக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் 54 பேர், டெல்லியில் 54 பேர், தெலங்கானாவில் 20 பேர், கர்நாடகாவில் 19 பேர், ராஜஸ்தானில் 18 பேர், கேரளாவில் 15 பேர், குஜராத்தில் 14 பேர், உத்தரப்பிரதேசத்தில் 2 பேர், ஆந்திராவில் 1, சண்டிகரில் 1, மேற்கு வங்கத்தில் 1, தமிழ்நாட்டில் 1 ஆகியோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேரும், டெல்லியில் 54 பேரில் இதுவரை 12 பேரும், கர்நாடகாவில் 15 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 பேரும், ஆந்திரா, மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.