தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் 16ம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், நாளை முதல் 18ம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவும் மேகமூட்டத்துடன் காணப்படும், என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.