அருப்புக்கோட்டையில் தடுப்பூசி முகாமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஏழாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 1 லட்சம் நபர்களை இலக்காக கொண்டு 1162 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ஆறு மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் மொத்தம் 15,50,893 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலும், தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டு, மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்திட மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, 12.9.2021, 19.9.2021, 26.9.2021, 3.10.2021, 10.10.2021, 23.10.2021 ஆகிய தேதிகளில் இதுவரை ஆறு மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை 5 கோடியே 73 லட்சத்து 91 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று ஏழாவது முறையாக மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு முகாம் முதல் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், இரண்டாம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் முக்கியத்துவம் அளித்து நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதல்வர் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.