
சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளது. விரிசல் ஏற்பட்டதால் அதிகாலையிலேயே மக்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் 23 ஆண்டுகள் பழமை வாய்ந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் செயல்பட்டு வந்தது. இந்த டி பிளாக் குடியிருப்பு கட்டடத்தில் நேற்று இலேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் தரைதளத்தில் உள்ள வீட்டில் பெரிய விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த குடியிருப்பில் இருந்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடுகள் இடிந்துவிட்டதால் மக்கள் அருகில் உள்ள சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். மேலும் இடிபாடுகளை அகற்றும் பணியிலும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.