
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனாவால், உலகின் பிற எந்த நாட்டையும் விட வல்லரசு நாடான அமெரிக்காதான் கூடுதல் பாதிப்புக்கு ஆளானது. இப்போது தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டு உலகமெங்கும் கால் பதித்து வருகிற ஒமைக்ரானும் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கி இருக்கிறது. ஒமிக்ரான் தொற்றுக்கு உலக அளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 6½ லட்சம் பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. அமெரிக்காவிலும் ஒமிக்ரான் முதல் களப்பலியை ஏற்படுத்தி உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 50 வயதை கடந்த ஒருவர் இந்த தொற்றால் இறந்துள்ளார். இவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர். ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்கு ஆளானவர் என தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 77 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "கொரோனா தொற்று பரவல் 10 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
டெல்டாவை விட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் 4 நாட்களில் ஒமிக்ரான் பரவல் இரட்டிப்பாகியுள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்" என்று கூறியுள்ளார்.